Thursday 5 November 2015

வெறுப்பு அரசியலின் உச்சத்தில் பாஜக! - தலைகுனியும் இந்தியா!


இந்தியாவில் சிவசேனா, இந்து சேனா, பஜ்ரங்தள், ஆர்எஸ்.எஸ், பாஜக எம்பிக்கள், பொருப்பாளர்கள் தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார்கள். குறிப்பாக முஸ்லிம் விரோத போக்கை மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள். 
பாடகர் குலாம் அலி கான்

பாகிஸ்தானைச் சார்ந்த கஜல் பாடகர் குலாம் அலி கான் மும்மையில் ஒரு இசை நிகழ்ச்சியில் பாட சிவசேனா பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 
              இந்நிலையில் கஜல் பாடகர் குலாம் அலி நவம்பர் 8ம்தேதி டெல்லியிலும், லக்னோவிலும் தாம் நடத்தவிருந்த கச்சேரிகளை ரத்து செய்துள்ளார். இந்தியாவில் நிலைமை சரியாகும் வரை அங்கு செல்லமாட்டேன். சமீபத்திய நிகழ்வுகளால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும், இந்திய ரசிகர்கள் தமக்கு எப்போதும் மிகுந்த ஆதரவளிப்பவர்கள், இருகரம் நீட்டி வரவேற்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
            மேலும், "நான் ஒரு பாடகன். நான் பாடலைப்பற்றி மட்டும் பேசுவேனே தவிர அரசியலைப்பற்றி அல்ல" என்றும் பிபிசிக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.


ஷாருக்கான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்...
நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் இந்தியாவில் தீவிர சகிப்பின்மை இருந்து வருவதாக கருத்து தெரிவித்திருந்தார். உடனே அதற்கு எதிர்வினையாக பாஜப எம்.பி. ஆதித்யநாத் என்பவர், "ஷாருக்கானின் மொழியும் தீவிரவாதத்தை ஆதரிப்பது தான் என்று கூறியதோடு, அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு அவர் பாகிஸ்தான் செல்வதை தாம் வரவேற்பதாகவும்", தெரிவித்துள்ளார். 
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய் வர்கியா தொடர்ந்து ட்விட்டரில் ஷாருக்கானுக்கு எதிராக எழுதி வந்தார். அதன் உச்சமாக, "ஷாருக்கான் ஒரு தேசத்துரோகி என்றும், அவர் இந்தியாவில் வசித்தாலும் அவரது ஆன்மா பாகிஸ்தானில் தான் உள்ளது", என்றும் தெரிவித்தார். பலத்த எதிர்ப்பு காரணமாக தனது கருத்துக்களை வாபஸ் பெற்றுவிட்டாலும் அதற்காக மன்னிப்புக் கேட்க அவர் மறுத்துவிட்டார்.

பிஹார் தேர்தலும் பாகிஸ்தானும்...
மக்களிடையே மதத்துவேசத்தை விதைத்து அதை வாக்குச் சாவடிகளில் அறுவடை செய்யும் வெறுப்பு அரசியலை பாஜக தொடர்ந்து செய்துவருகிறது. குஜராத் கலவரம், சமீபத்திய உ.பி.கலவரம் என அவர்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோத மனப்பான்மையை விதைத்து வருகின்றனர். பிஹார் தேர்தலில் இதுவரை நடை பெற்ற 3 கட்ட வாக்குப்பதிவுகளில் நிதிஷ்குமார் கட்சிக்கு அதிக ஆதரவு இருந்துள்ளது. எனவே தோல்வி பயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில்,"பிஹாரில் பாஜக தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்", என்று கூறியுள்ளார். இது வெறுப்பு அரசியலின் உச்சமாகும். இந்தியாவில் அதுவும் ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் பாகிஸ்தானில் ஏன் பட்டாசு வெடிக்கப்போகிறார்கள். டெல்லியில் பாஜக தோற்றபோது ஏன் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கவில்லை? பிஹாரில் கல்வியறிவு பெற்றவர்கள் மிகக் குறைவு. வறுமையும் அங்கு அதிகம் எனவே அந்த மக்களிடத்தில் பாஜக தான் இந்திய தேசத்தின் ஆதரவுக் கட்சி போலவும் மற்ற கட்சிகள் அப்படி இல்லை என்பது போலவும், பாகிஸ்தான் பாஜகவைக் கண்டு பயப்படுவது போலவும் சித்தரிக்க முயற்சிக்கிறார் அமித்ஷா. 
டெல்லியில்பாஜக பெண் எம்பி பிராச்சி,"ராமனின் பிள்ளைகள் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்றும் வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானின் பிள்ளைகள் என்றும் அவர்கள் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று பேசினார்.

வெறுப்பு அரசியல் கெஜ்ரிவால் கண்டனம்
பிஹாரில் பாஜக பலத்த தோல்வியை சந்திக்க வேண்டியது மிக அவசியம். அப்போது தான் வெறுப்பு அரசியலால் நாட்டில் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாஜக உணரும்", என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். பிஹார் மக்கள் நிதிஸ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துரிமை, சகிப்புத்தன்மைக்கு எதிராக பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் கொலைகள்...
பேரா. கல்புர்கி
இந்து மதங்களில் நிலவும் மூடநம்பிக்கைகள், உருவ வழிபாடுகளுக்கு எதிராக விமர்சித்து வந்த மூத்த எழுத்தாளர் பேராசிரியர்.எம்.எம். கல்புர்கி(வயது 77) ஆகஸ்டு மாதத்தில் அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். பிப்ரவரியில் கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த் பன்சாரே மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். 2013ல் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்ததால் இந்துத்துவவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவர் மஹாராஸ்டிராவில் மூடநம்பிக்கைக்கு எதிராக சட்டம் கொண்டுவர பாடுபட்டவர் என்பது மிக முக்கியமானது. இப்படி நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து பாசிச கருத்துக்களும் செயல்களும் மேலோங்கி வருவதை நாட்டின் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்து வருகிறார். இதுவரை அவர் இது போன்ற செயல்களை கண்டிக்கவில்லை.

மாட்டுக்கறி அரசியல்
பசு புனிதமாக்கப்பட்டு அது பெரும் அரசியலாக இந்தியாவில் தலையெடுத்து வருகிறது. தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய்யான தகவலை பரப்பி முஸ்லிம் முதியவர் முஹம்மது அக்லாக் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் அவரது வீட்டுக்குள் புகுந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கறியை எடுத்துச் சென்றது சோதனை செய்ய என்பது எவ்வளவு மோசமான செயல். ஒரு படுகொலை நிகழ்ந்துள்ளது அதற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் அது மாட்டுக்கறியா? ஆட்டுக்கறியா என்று சோதனை செய்ய காவல்துறை விரும்புகிறது. சரி கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறது? அவர் எதை உண்ண வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறையா? காவி பயங்கரவாதமா? என்ன நடக்கிறது இந்த நாட்டில்? காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் காரணம் ஒரு வெறுப்பு அரசியலே!

முதல்வருக்கு கொலை மிரட்டல்
கடந்த வாரம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனக்கு பிடித்தால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். உணவு ஒருவரின் தனிப்பட்ட உரிமை என செய்தியளர்களிடையே தெரிவித்திருந்தார். உடனே விஸ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜரங்தள், உள்ளிட்ட இந்து  அமைப்புகள் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். உச்சகட்டமாக பாஜகவின் ஷிமோகா மாவட்ட செயலாளர் சென்ன பசப்பா, "மாட்டுக்கறி சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன். அவரது தலையை கால்பந்து விளையாடவும் தயங்கமாட்டேன்", என்று கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மட்டும் தான் இந்துத்துவவாதிகளில் வெறிப்பேச்சுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், சித்தராமையாவிற்கு ஒரு கிலோ பன்றி இறைச்சியை பாரசலில் அனுப்பி வைத்தார். தனது கட்சியினருக்கும் சித்தராமையாவிற்கு பன்றி இறைச்சியை பார்சலில் அனுப்புமாறு கட்டளையிட்டுள்ளார். 

               கருத்துரிமைக்கு ஆதரவாகவும், சகிப்புத்தன்மை நிலவி நாட்டில் ஒற்றுமையும், ஜனநாயகமும் தழைக்க வேண்டும் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறி நாட்டின் உயர்ந்த விஞ்ஞானியான பார்கவா, எழுத்தாளர்கள், சினிமா படைப்பாளிகள் என பலரும் தான் பெற்ற தேசிய விருதுகளை திரும்ப தந்து தன் எதிர்ப்பை தெரிவிக்கும் சூழலுக்கு இந்த நாடு தள்ளப்பட்டிருப்பதற்கான காரணம் சங்பரிவார் கும்பலின் சகிப்புத்தன்மையற்ற பாசிச போக்கும், செயல்பாடகளும் தான் காரணமாகும். இந்த சகிப்புத்தன்மையற்ற தொடர் நிகழ்வுகளின் காரணமாக உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.




No comments:

Post a Comment