Thursday 26 November 2015

அரசமைப்பு கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தல் - சோனியா அச்சம்


பாஜக ஆட்சியில் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று மக்கள் அவையில் அது குறித்த தனது அச்சத்தை தெரிவித்தார். 
மக்களவையில் அவர் பேசும்போது, "அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அதை வரைவுசெய்தபோது அதில் பங்கேற்காதவர்கள் இப்போது அதன் மீது பிரமாணம் எடுக்கிறார்கள். உரிமை கோருகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதியாக இருப்பதாக விவாதம் நடத்துகிறார்கள். இதைவிட நகைப்புக்குரியது வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த சில மாதங்களாக நாம் பார்க்கும் சம்பவங்கள் அரசமைப்புச் சட்ட கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை. அரசமைப்புச் சட்டத்தை வரைவு செய்தபோதும் சுதந்திர போராட்டத்திலும் காங்கிரஸ் பங்கு முக்கியமானது.

அரசமைப்புச் சட்டம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் அதை அமல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் இறுதி பலன் மோசமாகவே இருக்கும் என்றே அம்பேத்கர் எச்சரித்துள்ளார். அம்பேத்கரை இப்போது அரவணைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. அதற்குதான் அதன் மீது உரிமை கோரமுடியும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியிலிருந்து அரசியல் கோட்பாடு, பொருளாதாரம் பற்றி மேல்படிப்பு முடித்து திரும்பிய அம்பேத்கரின் உன்னதத் திறமையை காங்கிரஸ்தான் கண்டறிந்தது. எஸ்.டி.களின் நலனுக்காக போராடியவர் அவர்.
1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இந்தச் சட்டத்தை வரைவுசெய்த கமிட்டிக்கு அம்பேத்கரைவிட வேறு சிறந்த தலைவராக வேறு இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார் ராஜேந்திர பிரசாத்" என்றார் சோனியா காந்தி.


சோனியாவின் இந்த கருத்துக்கு, "காங்கிரஸ் பார்வை எத்தகையது? ", என்று தமிழ் தி இந்து ஆன்லைனில் கருத்து கேட்பு பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியது அதில் காலை 11.00 மணிவரை பதிவான வாக்குகள்:
சகிப்பின்மை விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருப்பது...

               சரியான பார்வை : 57%
               தவறான கருத்து : 15%
               வழக்கமான அரசியல் : 28%
               மொத்த வாக்குகள்: 2339

No comments:

Post a Comment